Wednesday, March 21, 2012

தமிழக முதல்வர் அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு “குவைத் தமிழர் கூட்டமைப்பு” விடுக்கும் தலையாய வேண்டுகோள்


தோழமையீர்!
வணக்கம்.

தாயைப் பிரிந்த சேயின் மனநிலையோடு உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தாய்நாட்டின் மீதான பரிவும் ஏக்கமும் நிறைந்த மனத்துடனே அயல்நாட்டில் வாழும் தமிழர்கள் இருந்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் உருவாகும் பிரச்சனைகள், அரசியல் மாற்றங்கள், தொழில், உற்பத்தி நிலை என சமூக அரசியல் பொருளாதார நிலைகளை உன்னிப்புடன் கவனித்து வருவதோடு எங்களால் இயன்ற பங்களிப்பையும் நல்கி வருகின்றோம்.

அண்மைக் காலங்களில் தமிழினப் பிரச்சனைகளில் பொதுமக்களே தன்னெழுச்சியாக போராடுவதோடு, தொழில்துறையினர் உள்ளிட்ட பிறரும் இவ்வகைப் போராட்டங்களில் கலந்துகொள்வதும், இப்போராட்டங்களில் அரசியல் கட்சிகள் கலந்துகொள்வதும் எமக்கெல்லாம் நம்பிக்கைத் தருவதாக அமைந்திருக்கின்றது.

அரசின் முடிவுகளை ஊடகங்களும் பொதுமக்களும் ஏனைய அரசியல் அமைப்புகளும் பிரச்சனையின் அடிப்படையிலேயே அணுகப்பட்டமை புதிய மாற்றத்தை எமக்குத் தெளிவுபடுத்தியது. முத்தாய்ப்பாக அய்நா அவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் ஒலித்தமை தமிழினத்தின் புத்துணர்ச்சி என்றேக் கருதினோம். இதே நிலை தமிழினம் சார்ந்த அனைத்து முடிவுகளிலும் எதிரொலிக்க வேண்டுமென்பதே உலகத்தமிழர்களின் விருப்பமாகும்.

ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, கூடங்குளத்தின் இன்றைய நிலை எம்மை பதைபதைக்க வைத்துள்ளது. உலகத்தமிழர்களுக்கு தாயாகவிருந்து அரவணைத்துச் செல்ல வேண்டிய தமிழகத்தில் இன்று ஒரு பகுதியினர் ஏதிலிகளாக, கைதிகளாக, வாழ்வியல் உரிமை மறுக்கப்பட்டவர்களாக, தண்ணீர் மின்சாரம் உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு, தடுக்கப்பட்டு மிகக்கொடியதொரு நிலையில் உள்ளனர் என்ற செய்தி எம்மை நிலைகுலையச் செய்துள்ளது.

அரசாங்கம் என்பது வேறு மக்கள் என்போர் வேறல்ல, மக்களுக்கானதே அரசு. இதை இந்தியாவை தமிழகத்தை ஆள்வோர் நன்குணர்ந்து, மக்களின் உணர்விற்கும் தேவைக்கும் மதிப்பளித்து நடந்துகொளல் வேண்டும். இதைத்தான் தமிழக மக்களும் உலகெங்கும் விரவி வாழும் தமிழர்களும் விரும்புகின்றோம். இந்நிலையில் ஏற்படும் மாற்றங்களை அரசிற்கு உணர்த்தவும், மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் உணர்ந்து அவர்களோடு இணைந்து அரசினை வற்புறுத்த வேண்டிய கடமை அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் உள்ளது.

அந்த வகையில், தமிழக அரசியல் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுகூடி 6 மாதங்களுக்கும் மேலாக கூடங்குளம் அணுவுலைத் திட்டத்தை நிறுத்தக்கோரி நடைபெறும் மக்கள் போராட்டத்தில் உடனடியாக கலந்துகொண்டு, அவர்கள் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். காவல் துறையால் ஏற்படுத்தப்படும் பதட்டத்தை தணித்து, மக்கள் அச்சமின்றி வாழ வழிகாண வேண்டும்.

தமிழகம் முழுமைக்கும் இம்மக்களுக்கு ஆதரவான நிலையினை உருவாக்கி, நடுவண் அரசிற்கும் தமிழக அரசிற்கும் அழுத்தம் தந்து சரியான நிலைப்பாட்டினை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

காந்திய தேசம் அகிம்சை வழி என்று மேடையில் முழுங்கிவிட்டு அரசிற்கெதிராக போராடுவோரை ஆயுதம் கொண்டு தடுக்கும் நிலையினை மாற்ற வேண்டும்.

போராட்டங்களும் அதன் முறைகளும் தேர்ந்தெடுக்கப்படுபவை அல்ல, திணிக்கப்படுபவை. அமைதியான முறையில் போராடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைப்பது கொடுங்கோண்மையாகும்.

தமிழக அரசே, அரசியல் இயக்கத்தோரே, தமிழக பொதுமக்களே! இடிந்தகரை மக்களுக்கு துணை நிற்போம்! அமைதியான பாதுகாப்பான தமிழகத்தை உறுதிசெய்வோம்!.

தமிழ்நாடன்
ஒருங்கிணைப்பாளர்  

Friday, March 9, 2012

குவைத் தமிழர் கூட்டமைப்புக் கூட்டத்தில் தோழர். தஞ்சை பெ.மணியரசன் அவர்கள் தொலைபேசி வழி உரை:




http://www.youtube.com/watch?v=gH7lXg_W9yM&feature=youtu.be



Friday, March 2, 2012

கொடுமனங்குளிர...

அறிவியலும் தொழில்நுட்பமும் கணிணியும் முன்னிற்கும் இக்காலத்தில் மக்கள் வளமோடும் மகிழ்ச்சியொடும் வாழ்வதாகத்தான் கருதிக்கொண்டுள்ளனர். ஆனால் நடப்பெதென்னவோ அழிவைநோக்கித்தானுள்ளது. 

வளரும் இளம் பருவத்தினரும் பள்ளி மாணவர்களும் கூட கத்தியும் துப்பாக்கியும் தூக்கித்திரிகின்றனர். பொய்யும் புரட்டுக்களும் கொள்ளையும் கொலையுமென கொடுமனங்கொண்டலைகின்றனர் மனிதர்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? யார்க்காரணம்? என்ன செய்ய வேண்டும்?. அனைவரும் எளிமையாக செய்யக்கூடிய விடயத்தை, சென்னைப் பள்ளியில் கொலையுண்ட உமா ஆசிரியை வழக்கில் அவள் விகடனில் கருத்துத் தெரிவித்துள்ள சென்னை மனநல மருத்துவர் திரு.திருநாவுக்கரசு கூறியுள்ளார்.

”மொத்தப் பிரச்னைக்குமே காரணம்... நம்முடைய வளர்ப்பு முறையும், வாழ்க்கைச் சூழலும் தாறுமாறாக மாறிப்போய்க் கிடப்பதுதான். இன்றைய படிப்பு அறிவை வளர்ப்பதற்கு பதிலாக, பொருளாதார ஆதாயத்தை நோக்கியதாகவே மாறியிருக்கிறது. தாய்மொழிப் பாடங்கள் வழியே மாணவர்களுக்கு புகுத்தப்படும் நன்னெறிகள், நீதிபோதனைகள் எல்லாம் குறைந்துவிட்டன. நற்குணங்களை வளர்த்தெடுக்கும் அம்சங்கள் மொழி இலக்கியங்களில்தான் அதிகம் விரவிக் கிடக்கிறது. விரல்விட்டு எண்ணும் அளவிலான மாணவர்கள்கூட இதையெல்லாம் இன்றைக்குப் படிப்பதில்லை. அறிவியல், கணிதம் என்று இயந்திரத்தனமான பாடங்களையேதான் பிஞ்சுக் குழந்தையிலிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். நம்முடைய வற்புறுத்தலால்!.

ஊடகங்களில் அதீதமாகக் காட்டப்படும் வன்முறைக் காட்சிகள், குடும்பத்தில் பெற்றோரிடம் நடக்கும் தொடர் மோதல்கள், இன்னபிற அம்சங்கள் எல்லாமும் சேர்ந்து சிறுவயதிலேயே பெரும் குற்றங்களைச் செய்யும் அளவுக்கு மனதைத் தூண்டுகின்றன'' என்று பிரச்னையை வகைப்படுத்துகிறார் மருத்துவர்.”

தாய்மொழிக்கல்வி, செழுமையான இலக்கியங்கள், மலிவான ஊடகங்கள் இம்மூன்றும் முதன்மையான காரணிகள் என்கிறார். 

தாய்மொழிக்கல்வி தமிழர்கள் மறந்தவொன்றாகவுள்ளது. 

மிகச்சிறந்த உலகின் தொன்மையான நன்னெறிவளர்க்கும் இலக்கியம் தமிழில் கொட்டிக்கிடக்கின்றது, ஆனால் கவனிப்பார் யாருமில்லை.

மிகமலிந்த ஊடகங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்று கூறவேண்டும். சமூக அக்கறையின்றி தமிழர் பண்பாட்டை சிதைத்து வரலாற்றை மறைத்து உலக அழிவுப்போக்கிற்கு பெரிதும் துணை நிற்கும் இவ்வூடகங்கள்தாம் தமிழ்நாட்டில் செல்வாக்குப்பெற்று விளங்குகின்றன.

இவற்றில் நாம் மாற்றம் கொண்டு வராத வரை சமூக அவலங்கள் மாறப்போவதில்லை, அனைவரும் உணர்ந்து கொள்வோம், புத்துலகம் படைப்போம். 

தமிழர் மொழியும் கலையும் இலக்கியமும் ஒன்றே இதற்கான வழியென்பதை புரிந்துகொள்வோம்.

Thursday, March 1, 2012

1431 பயோரியா பல்பொடி

நிகழ்த்துக் கலைஞர் திரு.நாகராசன் சொன்னத் தகவல்:

இன்று நிறுவனங்களுக்கு பல்வகைப் பெயர்கள் பல்வேறு காரணங்களுக்காக வைக்கப்படுகின்றது. குறிப்பாக எண்ணியல் அடிப்படையில் வைக்கப்படுகின்றது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர் ஒருவர் தம் நிறுவனத் தயாரிப்பிற்கு எண்ணையே பெயராக வைத்திருப்பது ஆச்சர்யமல்லவா?. ஆம் ”1431” பயோரியா பல்பொடி தமிழர்களிடையே புகழ்பெற்றவொன்று. வழக்கம்போல் நம்மவரை நாம் கவனிப்பதில்லை, மேலைநாட்டாரின் கோமாளிதனத்தைக்கூட வியந்து பேசுவோம்.

1431 என்பதற்கான காரணத்தை நாம் யாரும் சிந்தித்துக் கூட இருக்கமாட்டோம். சிந்தித்து விடை அறிந்திருந்தால் நமது வரலாறு பண்பாடு வாழ்வியல் என்பவற்றை அறிந்திருக்கக் கூடும்.

ஆம், 1330 குறளும், உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருவருட்பயனில் 100 பாடல்களும் அதற்கான கடவுள் வாழ்த்து ஒன்றுமாகச் சேர்ந்து 1431 என்ற கூட்டுத் தொகையினை தமது தயாரிப்பிற்கு பெயராக வைத்துள்ளார் திரு.துரைசாமியார் அவர்கள்.

இதுவொரு வாய்வழிச் செய்தியாக இருந்தாலும், இன்று ஆங்கிலப் பெயர்களையும் சாதகம், வாசுது, எண்ணியல் பின்செல்வோருக்கு ஒரு சாட்டையடிதான்.

 எம்முன்னோர் திரு.துரைசாமியார் அவர்களின் எண்ணங்களையும் தொழில் முயற்சி புதுமைக் கண்ணோட்டம் என்னை வியப்பிலாழ்த்தியது.

வாழ்க துரைசாமியார் புகழ்!

பண்புடைமை

திருக்குறள் வகுப்பில் கேட்ட ஒரு கதை, பலரும் அறிந்தவொன்றுதான்.

ஆற்றில் தத்தளித்த ஒரு தேளை முனிவர் ஒருவர் கையால் எடுத்து கரையில் விடும் போது அத்தேள் அவரை கொட்டிவிட்டது. உடன் வந்த சீடர் அதை ஏன் காப்பாற்றினீர் கொட்டிவிட்டதல்லவா என்று கேட்க, கொட்டுவது அதன் இயல்பு, காப்பாற்றுவது என் இயல்பு என்று கூறி பண்புடைமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியதாக ஆசிரியர் கூறினார்.

நீதி: துன்பம் நேரும் என்றாலும் பண்பில் சிறந்தோங்க வேண்டும்.

கைப்புள்ள சொன்னது: எல்லாம் சரிதான் தேளை கையால் எடுக்காமல் கம்பால் எடுத்தால் இந்தப் பிரச்சனை வராதுல்ல...!!!.